பல காலம் தவமிருந்து
பத்து மாசம் காத்திருந்து
பக்குவமாய் பெற்ற மகன்
பாசத்துடன் வரைகின்றேன்..
காகிதத்தில் நான் வரையும்
காரணங்கள் ஒன்றிரண்டு
காலமெல்லாம் நீ பட்ட
கொடுந்துயரம் ஆயிரங்கள்..
உன்பெருமை எடுத்தியம்ப
என் திறமை போதாதம்மா
இருந்தாலும் ஒன்றிரண்டு
நான் சொல்வேன் கேட்டிடம்மா..
பட்டினியை உணவாக்கி
தாய்பாலை எனக்கூட்டி
காரிருளில் கண்விழித்து
வாழ்கையை தீயாக்கி
உன்னையும் திரியாக்கி
தீபம்போல் நான் எரிய
தூக்கிலிட்டாய் உன் நலத்தை..
படிக்காத நீ என்னை
பாடுபட்டு படிக்க வைத்தாய்
நான் படிக்கின்ற எல்லாமே
உன்னாலே உன்னாலே....
வாலிப வயதினிலே
வழிமாறி போகாமல்
வழிகாட்டியாயிருந்தாய்
வணங்குகிறேன் பாதம் தொட்டு..
எனக்கு சோதனைகள்
வழக்கமம்மா
என் சாதனைகள்
நீ வகுத்ததம்மா...!
உலகிலே சிறு புள்ளியம்மா நீ...!
எனக்கு தூரத்தில் தெரியும்
வெள்ளியம்மா நீ...!
அற்பமாய் பிறந்த என்னை
அன்பெனும் உளி எடுத்து
சொல்லாலே செதுக்கி
சிற்பமாய் மாற்றிவிட்டாய் ...
தொட்டு அணைக்க துடிக்கின்றேன்
தொலை தேசத்திலிருந்து
எட்டுகிறதா
எந்தன் குரல்?
No comments:
Post a Comment