Sunday, December 18, 2011

அமைதி மலரட்டும்

தீப்பந்தங்கள் எல்லாம்
தீபமாய் ஒளிரட்டும்
துப்பாக்கித் தோட்டாக்கள்
துப்பற்றுப்போகட்டும்,,

அராஜகம் பேசும் அரிவாள்கள்
சமையலறை சேரட்டும்
அதிகாரம் செய்யும் அதிகாரிகள்
ஆன்மீகவாதி ஆகட்டும் ..

ஜாதிகளின் பெயர்கள் எல்லாம்
நாதியற்றுப்போகட்டும்
சிறைகொள்ளும் கூடங்கள்
சிறுவர் பூங்காவாகட்டும்..

முரண்படும் கருத்துக்கள்
முகமலர்ந்து சிரிக்கட்டும்
இறக்காத சிலுவைகள்
இறைவனடி சேரட்டும்


சர்வாதிகாரிகளின்
சர்வவல்லமை உரைக்கும்
ஏடுகளெல்லாம் சுடுகாட்டில்
சங்கமமாகட்டும் ..

மயானப்படுக்கையிலே
கண்மூடித்துயில வேண்டும்
உயிர்குடிக்கும் ஜாதிவெறி

மண் குடைந்து
மறைக்க வேண்டும்
மதம் பிடித்த மதவெறியை

நீல வான்வெளியில்
மிதந்து செல்லும் வெண் புறாக்கள்
கூட்டமாக செல்லுகையில்
உயிரோட்டமொன்றை கண்டிடலாம்

பவள வாய் மலர்ந்து சொல்லும்
ஒவ்வொரு வாசகமும்
அமைதியை போதிக்கட்டும்
உலகத்தில் சாதிக்கட்டும் ..


நெஞ்சமெனும் விளை நிலத்தில்
விதை அன்றி களை முளைத்தால்
களைந்தெறிவோம் களை
காத்திடுவோம் விதை ..

தானத்தில் சிறந்த
தானமெல்லாம் சங்கமிக்கும்
மைதானம்
அதுவே சமாதானம் ..

No comments:

Post a Comment

PhotobucketPhotobucket
Photobucket