கண்ணகியின் மண்ணில்
கலைகள் பயின்றுவர
தங்கை கண்ணகியை
தனியாய் அனுப்ப துணிவில்லை
சாலை மீது பேருந்தில்
நகரா மரம் நகரும் போது
தொட்டுப்பார்ப்பவனை
தட்டிகேட்க முடியவில்லை
மனுநீதி காத்த சோழன்
தீர்ப்பளித்த திருநாட்டில்
நீதிக்கு சோதனைகள்
தருவோர் தான் போதகர்கள்
சேவை செய்து வாழவேன்றால்
வேலை செய்ய நேரம் இல்லை
கூலிக்கு வேலை செய்யும்
காலமெல்லாம் ஊழிக்காலம்..
பானையிலே சோறுவர
பாடுபட்டு உழைத்து வந்தால்
பசித்திருக்கும் பிள்ளைக்கு
பால் வாங்க காசில்லை..
நெஞ்சடித்து வேலை செய்ய
நெஞ்சுவலி வந்த
நெஞ்சுக்கு இயலவில்லை
தமிழனாய் பிறந்ததால்
உள்ளூர் முகவரி தொலைந்து
உலகில் புது வதி தேடும்
அகதிக்கு வாழ்க்கை தர வசதியில்லை
வான் ஏகும் நாடுகளுக்கு..
சொல்லிலே வலிமையும்
கையிலே வெறுமையும்
வாழ்கையில் வறுமையும்
கொண்ட கவிஞனை
வாழ்த்தும் வலிமையில்லை..
பாவொன்று வாய்மலர்ந்தால்
புரட்சிஎன்று பூட்டுப்போடும்
அரசை அதட்ட
நாவுக்கு உரிமையில்லை ...
பாரதி பிறந்த நாளில்
பாட்டுப்பாடி கைநீட்டும்
சின்னஞ்சிறு மொட்டுக்களை
தட்டிக்கொடுக்க முடியவில்லை
கொட்டிகிடக்கும் பணத்தில்
கொஞ்சம் கிள்ளிகொடுக்க
மனசில்லா வசதியுள்ள
வர்த்தகர்கள்
தட்சணை இல்லா
தட்டுக்கொடுத்து
அர்ச்சனை செய்ய
இயலவில்லை
வாரத்தில் ஏழு நாளும்
தீயினில் வேகும்
தாய்குலத்திற்கு முடியவில்லை
வாரத்தில் ஒரு நாள் லீவு..
துப்புகெட்ட அதிகாரிகள்
தப்புச்செய்யும் போதும்
தட்டி கேட்க முனையவில்லை
கைவசம் உள்ள லத்தியை பார்த்து..
ஆளும் கட்சி கையில்
தினம் ஒரு சட்டம்
வட்டமிட்டு சுத்தி நின்று
கைதட்டும் கூட்டம்
எட்டி மிதிக்க முடியவில்லை ..
இயலவில்லை , முடியவில்லை
திராணியில்லை, உரிமையில்லை
முனையவில்லை,மனமில்லை
எல்லாமே இல்லை தான்
என்ன வாழ்க்கைடா இது?
No comments:
Post a Comment